ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பஹ்ரைன் தமிழர்கள் போராட்டம்..


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உருக்கு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கூறியும் அப்பகுதி மக்கள் தானாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்கள் ஆதரவை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அரபு நாடுகளில் குவைத்தை தொடர்ந்து பஹ்ரைன் வாழ் தமிழர்களும் தங்கள் குரலை விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் பதிவு செய்தனர்.

மார்ச் 28ம் தேதி மனாமா குதேபியா பகுதியில் அமைந்துள்ள அல் ஆண்டளுஸ் பூங்காவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 100 தமிழர்கள் ஒன்று கூடி ஆலைக்கு எதிராகவும் போராட்ட காலத்தில் நிற்கும் மக்களுக்கு ஆதரவாகவும் தங்கள் குரலை பதிவு செய்தனர். ஆலையின் வரலாறு, விதிமீறல், சுற்றுசூழல் பாதிப்பு, மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பு போன்றவை விளக்கி கூறப்பட்டது. “அறம் செய்ய விரும்பு” மற்றும் “பஹ்ரைன் தமிழ் முத்துக்கள்” அமைப்பினர் இப்பிரச்சாரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.