ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடரும் மாணவர்கள் போராட்டம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த ஆண்டு முடிவடைகிறது. ஆலையின் அடுத்த விரிவாக்கத்திற்காக, அந்நிறுவனம் விரிவாக்கப் பணியினை தொடங்கி உள்ளது.

ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள கிராம மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்று நோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு எதிராக குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். எனவே ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதன்பின் குமரெட்டியார்புரம் மக்கள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக அமைதியாக மரத்தடி நிழலில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மாபெரும் போராட்டம் நடைப்பெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல்லாயிரகணக்கான மக்கள் பங்கேற்றனர். இதனால் தூத்துக்குடி நகரமே ஸ்தம்பித்தது.