கோடை விடுமுறை நாட்கள் நீட்டிப்பு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்..


கோடை விடுமுறை கூடுதலாக 10 நாட்கள் அதிகரிக்கப்படுவதாக தகவல் வந்ததற்கு மறுப்பு தெரிவித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், விடுமுறை நாட்கள் நீட்டிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை ஏப்ரல் 20ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது.

வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளி திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு ஜூன் முதல் நாள் வெள்ளியன்று வருவதாலும், தொடர்ந்து சனி,ஞாயிறு விடுமுறை தினமாக இருப்பதாலும், மொத்தமாக ஜூன் 3 தேதி வரை கோடை விடுமுறையை நீட்டிக்கப்படும் என்று தகவல்கள் வந்தன

ஏற்கனவே பள்ளிகளின் வேலைநாட்களை 220 லிருந்து 210 ஆக குறைத்துள்ள நிலையில், தற்போது கோடை விடுமுறையும் நீட்டிக்கப்படுவதால், வழக்கமாக 31 நாட்கள் கிடைக்கும் கோடை விடுமுறை, இந்தாண்டு 44 நாட்கள் கிடைக்கிறது என தகவல்கள் பரவியது.

இந்நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என்றும், விடுமுறை நாட்கள் நீட்டிப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.