ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஆறுமுகசாமி ஆணையத்தில் சாட்சி அளிக்கும் போது தாங்கள் கூறும் தரவுகள் தவறாக புரிந்துகொள்ளப்படுவதாகவும், மருத்துவர்கள் கொண்ட குழுவை அமைத்து, அந்த குழுவின் முன்னிலையில் தங்களிடம் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிடுமாறும் கோரி அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மருத்துவர் குழுவை அமைக்க உத்தரவிடவும், அதுவரை ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் கோரப்பட்டது.

அதனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், அப்போலோவின் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.