சர்ஜிக்கல் ஸ்டிரைக்: துல்லிய வீடியோ வெளியீடு…

கடந்த 2016ம் ஆண்டு செப்., 28 ம்தேதி நள்ளிரவு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 4 மணி வரை இந்திய ராணுவத்தினர், எல்லைக் கோட்டில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் வரை ஹெலிகாப்டர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். குறிப்பிட்ட இலக்கில் இறங்கி, பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இத்தாக்குதலில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஏழு பயங்கரவாத கூடாரங்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவத்தினர் குண்டு மழை பொழிய அதில் இருந்து உயிர்த்தப்பி இந்திய வீரர்கள் பத்திரமாக தங்கள் எல்லையை அடைந்தனர்.

அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி தல்பீர் சிங் ஆகியோர் இத்தாக்குதலை கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரலையாக பார்த்தனர்.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் தொடர்பான வீடியோவை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. தாக்குதல் நடக்கவே இல்லை என்றும் பாஜ., அரசு நாடகமாடுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. பாக்.,கும் இந்த தாக்குதலை திட்டவட்டமாக மறுத்தது. ஆனால் இச்சம்பவம் நடைபெற்றது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் வீடியோ காட்சி ஒன்று 636 நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவின் உண்மைத் தன்மையை, தாக்குதலில் பங்கேற்ற ராணுவ உயரதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட வீரர்கள் தங்கள் ஹெல்மட்டுகளில் வைத்திருந்த சிறிய கேமராக்களில் இந்த தாக்குதல் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டன.