தமிழை வணிக நோக்கில் அழைத்து செல்கிறது கூகுள்…

இணையதளங்களில் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் மூலம் இணையதளங்கள் வருவாய் ஈட்டவும் கூகுள் தனது விளம்பர சேவையை (Adsense) விரிவாக்கம் செய்துள்ளது.

கூகுள் ஆட்சென்ஸ் (Adsense) எனப்படும் கூகுள் விளம்பர சேவையானது கடந்த மாதம் வரை தமிழ் மொழி இணையதளங்களுக்கு கிடைக்காமல் இருந்தது. தற்போது அந்த சேவையை தமிழ் இணையதளங்களுக்கும் கூகுள் நீட்டித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, நேற்று சென்னையில் தனியார் ஹோட்டலில் ஆட்சென்ஸ் அறிமுக நிகழ்ச்சிக்கு கூகுள் ஏற்பாடு செய்தது.

இதில், ஏராளமான தமிழ் இணைய எழுத்தாளர்கள் (Bloggers), இணையதள வடிவமைப்பாளர்கள், இணையதள நிறுவனங்கள் பங்கேற்றன. தமிழ் இணையதளங்கள் கூகுள் ஆட்சென்ஸை பயன்படுத்துவது எப்படி உள்ளிட்ட விளக்கங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கூகுள் இந்தியாவின் ஆன்லைன் பார்ட்னர்ஷிப் பிஸினஸ் தலைவர் ஜெய்வீர் நாகி தெரிவித்த போது, ஆன்லைனில் உள்ளூர் மொழிகளில் விளம்பரங்களை தருவதில் விளம்பரதாரர்கள் விரும்புவதாகவும், அதற்காக கூகுள் தனது சேவையை ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்துவருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தி, பெங்காலியை தொடர்ந்து இந்தியாவில் தமிழில் ஆட்சென்ஸ் சேவை வழங்கி இருப்பதாகவும், இது இன்னும் அதிகளவிலான தமிழ் இணையதளங்கள், தகவல்கள், செய்திகள் இணையத்தில் கொண்டுவருவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றார்.

அடுத்த 3 ஆண்டுகளில் உள்ளூர் மொழியிலான விளம்பர சந்தை ரூ. 10 ஆயிரம் கோடியாக இருக்கும் என்றும், ஆன்லைனில் இதன் பங்கு 5% இருந்து 35 % ஆக உயரும் என்றும் நாகி தெரிவித்தார்.

மேலும், இந்தியாவில் ஆன்லைனில் உள்ளூர் மொழி பயனர்கள் 23.4 கோடியாக உள்ள நிலையில், இது 2021-ல் சுமார் 53.4 கோடியாக உயரும் என்றும் நாகி கூறினார்.
முதன்முறையாக கூகுள் சென்னையில் நிகழ்ச்சி நடத்தியிருப்பது அனைவராலும் வரவேற்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகளை சென்னையில் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது கூகுள் தெரிவித்துள்ளது.