தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் : பிரதமர் மோடி பேச்சு..

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் கூட்டணிக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது.

சென்ட்ரல் ரயில் நிலையம் இனி எம்ஜிஆர் ரயில் நிலையமாக அழைக்கப்படும். சென்னைக்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்புகள் செய்யப்படும்.

தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான்.

யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன்.

இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும். ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும்.

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம். தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 66 நாடுகளுடன் இ-விசா வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

மோடியை வசைபாடுவதில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி. என்னை சிலர் திட்டுகிறார்கள். சிலர் என் ஏழ்மையை திட்டுகிறார்கள். சிலர் என் குடும்பத்தை வசைபாடுகிறார்கள்.

சிலர் என்னை கொல்ல கூட நினைக்கிறார்கள். பரவாயில்லை, நான் மக்களுக்காக வாழ்கிறேன்.

மக்களுக்காக நான் ரத்தம் சிந்த தயார். மக்களுக்காக நான் எதையும் சந்திக்க தயாராக இருக்கிறேன். மக்களின் நலனே எங்களுக்கு முக்கியம்.

நாட்டின் முடிவுகள் டெல்லியில் எடுக்கப்படுவதில்லை. நாட்டு மக்களே உச்சபட்ச கமாண்டர்கள். நாட்டின் பாதுகாப்பில் எதிர்கட்சிகள் அலட்சியம் காட்டிவருகின்றன.

வலிமையான ராணுவத்தை அவர்கள் விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள்.

எம்ஜிஆர் அரசை காங்கிரஸ் தான் டிஸ்மிஸ் செய்தது. சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி காங்கிரஸ் சர்வாதிகாரமாக செயல்பட்டது.

காங்கிரஸ் திமுக அரசை கூட டிஸ்மிஸ் செய்துள்ளது. ஆனால் இப்போது அவர்களே கூட்டணி வைத்துள்ளனர்.

காங்கிரசால் மாநில நலன்களை பூர்த்தி செய்யமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம்.

சர்வாதிகாரம் மற்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்ததால் காமராஜரை, காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியது.

திமுக உட்பட பல்வேறு அரசுகளை காங்கிரஸ் அரசு கலைத்தது. சந்தர்பவாத அரசியலால் திமுக, காங். கட்சியுடன் இணைந்துள்ளது.

பாஜக கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழக மக்களே எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள். அனைவருக்கும் நன்றி.

நாளை நமதே நாற்பதும் நமதே என தெரிவித்து பாரத் மாதாகி ஜே… என 3 முறை கூறி உரையை முடித்தார்.