தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்..

தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. திருத்தணியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில் மழை பெய்ததால் இதமான சூழல் நிலவியது

திருவள்ளூர் அருகே உள்ள கீரனூர் பகுதியில் காற்று பலமாக வீசியதால் மின்கம்பத்தில் உள்ள உயர் அழுத்த மின்சார ஒயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டு தீப்பற்றி எரிந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, பாதிரி, மாம்பட்டு, மற்றும் சென்னாவரம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களிலும் நேற்று பரவலாக மழைபெய்துள்ளது. சென்னையின் சில பகுதிகளில் நேற்று இரவு சாரல் மழை பெய்தது.

இதனிடையே, கர்நாடகா மற்றும் ஆந்திராவின் கடலோர பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில், இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.