தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு. : வானிலை மையம்…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான ஃபானி புயல் தமிழகத்தை தாக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அது தற்போது திசைமாறி ஒடிசாவை நோக்கி நகர்ந்துள்ளது.

இந்த புயலால் தமிழகத்தில் மழை பெய்து, தண்ணீர் பஞ்சம் நீங்கும் என கூறப்பட்ட நிலையில் அது பொய்த்துப்போனது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

இருப்பினும் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் கோடைமழை அவ்வப்போது பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.