தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தமிழகத்தின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

வட மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என்றும் கூறியிருக்கிறது.

கடந்த 4ஆம் தேதி கத்தரி வெயில் தொடங்கிய நாள் முதலே, வட மாவட்டங்கள் உட்பட, தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

ஒரு சில இடங்களில், வெப்பச்சலம் காரணமாக, மழையும் பதிவாகி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டின், உள் மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களில், பலத்த காற்றுடன், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியிருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மழை பெய்யாத இடங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், குறிப்பாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும், கூறியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில், 7 சென்ட்டி மீட்டர் மழைப் பதிவாகியிருக்கிறது.

தேனி மாவட்டம் கூடலூரில் 4 சென்டிமீட்டரும், கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில், 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது.