தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமனம்..

தமிழகத்தின் புதிய தலைமைசெயலாளராக நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிறைத்துறை டிஜிபியாக இருந்த ஜே.கே.திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள கிரிஜா வைத்தியநாதனின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், நிதித்துறைக்கு பொறுப்பாக, கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் இருந்த சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சண்முகம் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். 1985ஆம் ஆண்டு கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சண்முகம், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே நிதித்துறை செயலராக பொறுப்பு வகித்து வருகிறார்.

திமுக ஆட்சியிலும் அதிமுக ஆட்சியிலும் நிதித்துறை செயலாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

கடந்த 9 ஆண்டுகளாக நிதித்துறை செயலாளராக உள்ள அவர், அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட காலங்களில் திறம்பட செயல்பட்டு நிதிச்சுமையை பெருமளவு குறைத்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்.எஸ்.சி., வேளாண்மை படித்துள்ள சண்முகம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆட்சியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.