தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை..

 


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை, காரைக்குடி, புதுவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதேபோல், கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால், கழிவு நீர் கால்வாய்கள் நிரம்பி, சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

கரூர் -திருச்சி சாலையில் உழவர் சந்தை திருப்பத்தில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். இதனால் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தமிழகத்தின் கடற்பரப்பில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென் தமிழக பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.