ஆசிரியர் பகவான் அதே பள்ளியில் பணியை தொடர அனுமதி : மாணவர்கள் போராட்டம் வெற்றி..


மாணவர்களின் பாசப்போராட்டத்தின் எதிரொலியாக ஆசிரியர் பகவானின் அதே பள்ளியில் பணியை தொடர பள்ளி கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

திருவள்ளூரில் மாவட்டம் பள்ளப்பட்டு அருகே உள்ள வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருபவர் பகவான்.

6 முதல் 10 வகுப்பு வரை 260 மாணவர்கள் படித்து வரும் அந்த பள்ளியில், ஆங்கில பாடத்திற்கு பகவான் உட்பட 4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆசிரியர் பகவான் வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியில் 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதனால் அவர் பொது மாறுதலுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டார்.

அதில் அவருக்கு வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவு வெளியானது. ஆசியர் பகவானின் பணியிட மாறுதலை அறிந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சோகத்தில் மூழ்கினர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பகவான் தங்கள் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, இடம் மாறுதலுக்கான ஆணையை வாங்க பள்ளிக்கு வந்த ஆசிரியர் பகவானை சூழ்ந்து கொண்ட மாணவர்கள், அவர் பள்ளியை விட்டு செல்லக்கூடாது என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தனர்.

திருவள்ளூரில் ஆசிரியருக்காக மாணவர்கள் நடத்திய இந்த பாசப்போராட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. பல பிரபலங்களும் பகவானுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஆசிரியர் பகவான் வெள்ளியகரம் அரசு உயர்நிலை பள்ளியிலேயே பணியை தொடர கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

மேலும், அவரது பெயரை அரசு பள்ளி வருகை பதிவேட்டில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வெள்ளியகரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.