தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் இன்று 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு காலக்கெடு நிர்ணயித்தது.

இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களின் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பயிற்சி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்தது.

அதேநேரத்தில், காலக்கெடுவுக்கு பின்னர் பணிக்கு வரும் ஆசிரியர்கள், ஏற்கெனவே பணியாற்றிய இடங்களிலேயே மீண்டும் பணியாற்றுவதற்கான உத்தரவாதம் வழங்க முடியாது என்றும்,

குறிப்பிட்ட வருவாய் மாவட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் பணிக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆசிரியர்கள் வழக்கம்போல் இன்று பணிக்கு திரும்பிவிட்டனர்.

இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் எந்த அரசு பள்ளியும் இன்று மூடப்படவில்லை.

இதனிடையே, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாகக்கூறி, சென்னையில் 12 ஆசிரியர்களும், காஞ்சிபுரத்தில் 11 ஆசிரியர்களும், திருவள்ளூரில் 5 ஆசிரியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள அறிக்கையில்,

தற்காலிக ஆசிரியர்கள் நாளை முதல் பணி நியமனம் செய்யப்படுவார்கள். மொத்தம் 1.71 லட்சம் பேர் நியமிக்கப்படுகிறார்கள். என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ள நிலையில் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.