தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு..

தென்காசியை புதிய மாவட்டமாக அறிவித்ததற்கு வைகோ வரவேற்பு

சங்கரன்கோவில் தொகுதி தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்திலேயே நீடிக்கின்ற வகையில் மாவட்டப் பிரிவினை அமைந்திட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.

திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டபேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளதை வரவேற்பதாக வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் பகுதிகளில் இருந்து தென்காசிக்கு நேரடியான போக்குவரத்துத் தொடர்புகள் இல்லை.

இவை, தென்காசியில் இருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. திருநெல்வேலிதான் அருகில் உள்ளது என்றும் கல்வி, மருத்துவத் தேவைகளுக்காக இப்பகுதி மக்கள் அன்றாடம் திருநெல்வேலிக்குச் சென்று வருகின்றார்கள்.

எனவே, சங்கரன்கோவில், திருவேங்கடம் வருவாய் வட்டத்தை சேர்ந்த நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மக்கள், திருநெல்வேலி மாவட்டத்திலேயே தொடர்ந்து நீடிக்க விரும்புகின்றார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.