தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை: மத்திய அரசுக்கு முழு ஆதரவளிப்பதாக அனைத்துக்கட்சிகள் உறுதி

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அனைத்துக்கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டு வீசி அழித்தது.

இதையடுத்து, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் விமானப்படைக்கு பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தின.

12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதில் பாலாகோட், சாக்கோட், முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது.

விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அரசுக்கு நெருக்கடியையும் உருவாக்கியுள்ளது.

விமானப்படையின் தாக்குதலை இந்தியாவில் கட்சி பேதமின்றி அனைத்து தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

இந்நிலையில், விமானப்படை தாக்குதல் குறித்து வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் அளித்தார்.

கூட்டத்துக்கு பின் அவர் கூறுகையில், ‘‘தீவிரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், ‘‘விமானப்படையின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். தீவிரவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’’ எனக் கூறினார்.