தாய்லாந்து குகையில் சிக்கிய அனைவரும் மீட்பு


தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைத்து சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு, பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

அப்போது, பருவமழை தீவிரமடைந்ததால் தாம் லுவாங் குகைக்குள் அந்த 13 பேரும் சிக்கிக்கொண்டனர். குகைக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பேரால் வெளியே வரமுடியவில்லை.

இதுதொடர்பாக தாய்லாந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாயமான 13 பேரையும் மீட்கும் பணி கடந்த இருவாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.
தாய்லாந்து நாட்டு ராணுவத்தினருடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மீட்பு பணியில், நேற்று வரை 8 சிறுவர்கள் மீடப்பட்டிருந்தனர். இன்று குகைக்குள் சிக்கியிருந்த 3 சிறுவர்கள் உட்பட பயிற்சியாளரும் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து குகைக்குள் சிக்கியிருந்த அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர்கள் அனைவரும் மனோதிடத்துடனும், உடல் ஆரோக்கியத்திடனும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்ட நிலையில், தாய்லாந்து சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகைக்கு தாய்லாந்து அரசால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களாக சிறுவர்களை மீட்கும் பணியில் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய அனைத்து மீட்பு குழுவினருக்கும் உலக மக்கள் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.