தாய்லாந்து நாட்டின் புதிய மன்னராக மகா வஜிரலங்கோன் இன்று முடி சூடினார்..

தாய்லாந்து நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் தாய்லாந்து மன்னர் புமிபோல் அடுல்யாதேஜ் வயோதிகம் காரணமாக உயிரிழந்தார்.

அன்று முதல் அரசியலமைப்பு மன்னராக மகா வஜிரலங்கோன் (66) பொறுப்பேற்றார். இவரை ரமா எக்ஸ் என்றே அழைக்கின்றனர்.

இவருக்கு புத்தம் மற்றும் பிராமண முறைப்படி முடிசூடும் விழாக்கள் கொண்டாடப்படும் எனவும் முடிசூடிய மறுநாள் மாபெரும் அணிவகுப்பு நடத்தப்படும் எனவும் மன்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தாய்லாந்து மன்னர் மகா வஜிரலங்கோன், துணை பாதுகாவலரான சுதிடா டித்ஜாய் என்பவரை கடந்த மே 1ம் தேதி திருமணம் முடித்தார்.

அதன் பின்னர் சுதிடாவை தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ ராணியாகவும் அறிவித்தார். இந்த திருமண விழாவில் நடந்த நிகழ்ச்சிகள், கோலாகலங்கள் தாய்லாந்து ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டன.

திருமணம் முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், இன்று காலை மன்னர் மகா வஜிரலங்கோன் அதிகாரப்பூர்வமாக முடி சூடி அரியணை ஏறினார்.

தாய்லாந்து அரசு முன்னதாக அறிவித்தப்படி புத்தம் , பிராமண முறைப்படி விழா நடத்தப்பட்டு, கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி தாய்லாந்தின் முக்கிய நகரங்களில் இரவு நேரங்களில் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மன்னரை காண மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், அதிக எதிர்பார்ப்புடனும் கூடியுள்ளனர்.

அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகளும் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.

தாய்லாந்து வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் இந்த முடி சூடும் விழா இன்று நடந்தது. மேலும் நாளை அரசு முறை அணிவகுப்பு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.