“தீரன் அதிகாரம் ஒன்று” : திரை விமர்சனம்..


கார்த்தி கொம்பன், தோழா என தொடர் வெற்றிகளை கொடுத்தவர். இந்த வருடம் காற்று வெளியிடையில் கொஞ்சம் சறுக்கினார், விட்டதை பிடிக்க சதுரங்க வேட்டை வினோத்துடன் களத்தில் தீரனாக இறங்கினார், விட்டதை பிடித்தாரா? பார்ப்போம்.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் ஜோடி நடிக்க, “டிரீம் வாரியர் பிக்சர்ஸ்” பேனரில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரித்து வழங்க, “சதுரங்க வேட்டை” வித்தியாச வெற்றிப்பட இயக்குனர் H.வினோத்தின் எழுத்து, இயக்கத்தில் வந்திக்கும் விறு விறு ரியல் போலீஸ் ஸ்டோரிதான் “தீரன் அதிகாரம் ஒன்று”.
தமிழ் சினிமாவில் இதற்கு முன், எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன…. என்றாலும், அதில், பெரும்பாலானவை, ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, அல்லது, தன் குடும்பத்தினரைக் கொன்றவனை பழி வாங்கத் துடிக்கும் போலீஸ் நாயகரைத் தடுக்கும் அரசியல்வாதி…. இவர்களை ஒரு மாதிரி போராடி ஒரு வழியாக அடக்கி ஒடுக்கும் போலீஸ் ஹீரோ…. எனும், கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் கூடிய கதைகளாகத்தான் இருக்கும்.
ஆனால், அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு முதல் முறையாக ஒரு போலீஸ் அதிகாரியின் விசாரணை வாழ்க்கை, இந்த ‘தீரன்அதிகாரம் ஒன்று’ படத்தில் யதார்த்தமாக கொடுத்திருக்கிறார்கள்.
‘சதுரங்க வேட்டை’ படத்தில் ஒரு ஏமாற்றுக்காரனை நாயகனாக வைத்து பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் H.வினோத், இந்தப் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியின் தியாகத்தை நாமும் ‘ராயல் சல்யூட்’ அடித்து பாராட்டும்படி படம் பிடித்திருக்கிறார்.
கதைப்படி, மிகவும் நியாயமான நேர்மையான இளம் டிஎஸ்பி தீரன் திருமகன் – கார்த்தி அவர் போலீஸ் டிரெயினிங் முடித்து, கண்டவுடன் காதல் கொண்ட பக்கத்து வீட்டுப் பெண் ப்ரியா – ரகுல் ப்ரீத் சிங்கை, தன் மனம் விரும்பியபடியே கைப் பிடித்த கொஞ்ச நாட்களிலேயே.
தன்னுடைய நேர்மை மற்றும் கடமை உணர்வால் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் தூக்கி அடிக்கப்படுகிறார். ஒரு வழியாக ஒரு கட்டத்தில் அவர் அங்கு சுத்தி, இங்கு சுத்தி, திருவள்ளூர் மாவட்டபொன்னேரி சரக டிஎஸ்பி-யாக நியமிக்கப்படுகிறார்.
அப்போது நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாக இருக்கும் பெரிய வீடுகளில் அடிக்கடி நடக்கும் அரக்கத்தனமாக கொலை, கொள்ளைகளைப் பற்றிய விசாரணையில் இறங்குகிறார். அத்தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏவை அவரது வீட்டில் கொள்ளையடிக்க புகுந்தபோது அந்தக் கொள்ளை கும்பல், கொடூரமாக தாக்கி கொலை செய்த பிறகுதான் அரசு தரப்பில் விசாரணையை தீவிரப்படுத்துகிறார்கள். அதைத் தொடர்ந்து வட இந்தியாவில் பதுங்கியிருக்கும் அந்த கொள்ளைக் கூட்டத்தைக் தேடிப்பிடிக்க, தன் தலைமையில் தனி போலீஸ் படையுடன் கார்த்தி களம் இறங்குகிறார்.
அச்சமயத்தில், அந்த விசாரணைக்கான தேடுதல் வேட்டைக்கு கார்த்தியின் டீமில் இருக்கும் இன்ஸ்பெக்டரான போஸ் வெங்கட், வட இந்தியாவுக்கும், கார்த்தி லோக்கலில் தீவிர தேடுதல் வேட்டைக்கும் சென்றிருக்கும் நேரத்தில் போஸ் வெங்கட் குடும்பத்தார், அந்தக் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு உதவ ஒடிய கார்த்தியின்மனைவி ரகுல் ப்ரீத் சிங்கும் பலமாகத் தாக்கப்படுகிறார்.
இதன் பின் வெகுண்டெழும் டிஎஸ்பி தீரன் திருமகன் – கார்த்தி, கொள்ளையர்களை அவர்கள் சர்வ வல்லமை பொருந்தியவர்களாக வாழும் வட இந்தியா சென்று கூண்டோடு பிடித்தாரா? கொடூர தண்டனைதந்தாரா.? என்பதுதான் “தீரன் அதிகாரம் ஒன்று”. படத்தின் திக் திக் திருப்பங்கள் நிரம்பிய வித்தியாச விறு விறு கதையும், களமும்!
டி.எஸ்.பி.தீரன் திருமகன் என்ற பெயருக் கேற்றபடி தீரமாகசெயல்படும் டிஎஸ்பியாக கார்த்தி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய அதிகாரத்துடன் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
ரகுல் ப்ரீத்துடனான ஆரம்ப காதல் காட்சிகளில் எக்கச்சக்க ரொமான்ஸ் காட்டும் கார்த்தி, பின்னர் டி.எஸ்.பி ஆனதும், தன்னிடம் கொட்டி கிடக்கும் அந்த வேகம், மற்றும் துடிப்பால் ஆக்ஷனிலும் அசத்தியிருக்கிறார். காக்கி சட்டைப் போட்ட கார்த்திக்கு சிறுத்தைக்குப் பின் மற்றுமொரு ஹிட் இந்தப் படம். என்றால் மிகையல்ல.!
ப்ரியா எனும் கார்த்தியின் காதல் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங், பலமுறை பனிரெண்டாம் வகுப்பு பெயிலான ஒரு பெண் எப்படிப்பட்ட மன நிலையில் இருப்பார் என்பதை அப்படியே வெளிப்படுத்தியிருக்கிறார் அம்மணி. வாவ்! கார்த்தியுடனான காதல் காட்சிகளில் அம்மணி காட்டியிருக்கும் நெருக்கம், ரசிகனுக்கு செம கிறக்கம்.
படத்தில் வில்லனாக வரும் அபிமன்யு சிங், கொடூர வட இந்திய கொள்ளைக் கூட்டத் தலைவன் இப்படித்தான் இருப்பாரோ என நம்மை பயமுறுந்துகிறார். கார்த்தியின் தனிப்படையில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட்டும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
மனோபாலா, சத்யன், வர்கீஸ் மேத்யூ, ரோஹித் பதக், நாரா ஸ்ரீனிவாஸ், சுரேந்தர் தாக்கூர், பிரயா ஸ்மன், கிஷோர் கன்டம், ஜமில் கான், ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன், கல்யாணி நட்ராஜன், சோனியா, பிரவிணா, அபிராமி உள்ளிட்ட அனைவரும் தங்கள் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்.
அதிலும், “கடக் கடக் கங்கணா….”, ஹிந்தி குத்துப் பாடலுக்கு ஆடும் ஸ்கார்லெட் மெல்லிஷ் வில்சன், செம்மையோ செம. வாவ்!
கதை முழுதாக வைத்ததற்குப் பதிலாக திலீப் சுப்பராயனின் ஆக்ஷ்ன் இயக்கம், அதிரடி இயக்கம். என்பதும் T.சிவனான்டேஸ்வரனின் படத்தொகுப்பில்.,இடைவேளை வரை காட்சிகள் நகர்வதே தெரியவில்லை.
கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங்காதல் காட்சிகள், கொள்ளையர்களின் அட்டகாசம், கார்த்தியின் தேடுதல் ஆரம்பம் என மொத்தப் படமும் விறுவிறுப்பாக நகர்வதும்… படத்திற்கு பெரும் பலம்!
சத்தியன் சூரியன் ஒளிப்பதிவு, படத்திற்கு மேலும் திக்.திக்.பக்,பக்… சேர்த்திருக்கிறது. பலே, பலே.
ஜிப்ரான் இசையில் பின்னணி இசை படத்தின் வேகத்தை பரபரப்புடன் நகர்த்த பெரிதும் உதவியிருக்கிறது. “லாலி, லாலி…”, ”செவத்த புள்ள… புள்ள…”, “கடக் கடக் கங்கணா….”, “ஒசாத்தியே” உள்ளிட்ட பாடல்கள் சுபராகம்.
“சதுரங்க வேட்டை” இயக்குனர் H.வினோத்தின் எழுத்து, இயக்கத்தில், “ஒரு பிரண்டு 2அண்ணன், 4தம்பி, லவ்வுன்னு வந்துட்டா நூறு மாமாக்களுக்கு சமம்.”, “நாம கெட்டவங்க கிட்டேயிருந்து நல்லவங்களை காப்பாத்தறத விட்டுட்டு…. நல்லவங்க கிட்டேயிருந்து கெட்ட வங்களை காப்பாத்துற வேலையில்ல பார்க்குறோம்…” என்பது உள்ளிட்ட ஜாலியான, கேலியான இப்படத்திற்கும், கதைக்கும் நியாயம் சேர்க்கும் வசனங்களும், ஒரு போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிஜ வழக்கின் அடிப்படையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
என்பதும், இப்படத்தின்கடைசியில் இப்படி வேலை செய்த அதிகாரிகளுக்கு எந்த விருதும், பதவி உயர்வும் வழங்கப்படவில்லை… என்ற அதிர்ச்சியான தகவலும் ரசிகனை யோசிக்க வைப்பதே இப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்!
.நியாயமான, நேர்மையான இளம் அதிகாரிகளின் கடமை உணர்வில், ஆளும் வர்க்கத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் குறுக்கிடாமல், குளறுபடி செய்யாமல் இருந்தாலே இந்தியாவில் எப்பேற்பட்ட குற்ற செயல்களையும் கண்டுபிடித்து உரிய தண்டனை தர முடியும் எனும் கருத்தோடு வந்திருக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு, அதிகாரம் இரண்டும் உடனடியாக ஆரம்பமாகலாம்…. எனும் அளவிற்கு தீரன் அதிகாரம் ஒன்று தீர்க்கமாக வெற்றி பெறும் எனலாம்!
ஆக மொத்தத்தில், “தீரன் அதிகாரம் ஒன்று’ – படத்தின் வெற்றி., ‘தீர்மானிக்கப்பட்ட ஒன்று!”