தேனி,ராமநாதபுரத்தில் பரப்புரை மேற்கொள்ள பிரதமர் மோடி மதுரை வருகை..

தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மதுரை வந்து சேர்ந்தார். தேனி மற்றும் ராமநாதபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரிக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, செவ்வாய்க்கிழமையன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.

இந்நிலையில் தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் மோடி இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக, கேரள மாநிலம் கோழிக்கோட்டிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு 9.50 மணிக்கு மதுரை வந்தடைந்தார்.

பின்னர் கார் மூலம் மதுரை பசுமலையில் உள்ள தாஜ் கேட்வே ஹோட்டலுக்கு புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, மோடியை வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,
இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விரைவில் அறிவிக்கபடும் என்றும் தெரிவித்தார்.