திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..


துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா வரும் 30ஆம் தேதி இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவப்பு சாத்தியும், 6ஆம் தேதி பச்சை சாத்தியில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக வீதி உலா வருகிறார்.

முக்கிய நிகழ்வான 8ஆம் தேதியன்று தேரோட்டம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருச்செந்தூரை கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

அலைகள் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை ஓதியபடி அழகன் திருவடிகளை பணிந்து செல்கிறது. இந்த கோவிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு உந்து சக்தியாக பஞ்சலிங்கங்களும் வெங்கடேச பெருமாளும் உள்ளனர்

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா இன்று 30ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது.

இதனையொட்டி 29ஆம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கொடியேற்றத்தை முன்னிட்டு 30ஆம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

காலை 5 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெற்றது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருகின்றனர்.

செப்டம்பர் 3ஆம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. 5ஆம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9 மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.

செப்டம்பர் 6ஆம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. செப்டம்பர் 10ஆம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.