திருவாரூர் இடைத்தேர்தல்: கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவையே தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடக் கோரிய வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்ட நிலையில், உயர்நீதிமன்றம் அது தொடர்பான மனுவையே விசாரணைக்கு ஏற்க மறுத்து விட்டது.

வரும் 28-ம் தேதி திருவாரூரில் நடத்தப்படும் இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் , தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அமர்வு முன்பு முறையிடப்பட்டது.

20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாகவும், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் திருவாரூரில் மக்கள் தேர்தலுக்கு தயாராகவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் வழக்கறிஞர் இந்திரா கோரியிருந்தார். ஆனால் அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், கஜா புயல் மீட்புப் பணிகள் முழுமை பெறாத நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாத் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரிக்க மறுத்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.