3 வாரங்களில் வடகிழக்கு பருவமழை : வானிலை ஆய்வு மையம் தகவல்..

அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், பெரம்பலூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மற்ற மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களில் வறண்ட வானிலையே நிலவும். அடுத்த 2 நாட்களுக்கு பிறகு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் 4 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும்,

நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் வால்பாறை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலகட்டமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் முடிவடைந்த நிலையில், இந்தியா முழுவதும் இதுவரை கிடைக்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை அளவு 88 சென்டிமீட்டர், கிடைத்துள்ள அளவு 97 சென்டிமீட்டர்.

வழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இதேபோல தமிழகத்திற்கு 34 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டியது நிலையில், தற்போது 40 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.

இது 16 சதவீதம் அதிகமாகும். சென்னையை பொருத்தவரை 44 சென்டிமீட்டர் மழை கிடைக்க வேண்டிய நிலையில், தற்போது 59 சென்டிமீட்டர் மழை கிடைத்துள்ளது.

இதில் 34 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மூன்று வாரங்களில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.