திப்பு ஜெயந்திக்கு எதிராக வலுக்கும் போராட்டம் : கர்நாடகாவில் ஏராளமானோர் கைது..

கர்நாடகாவில் அரசு சார்பில் நடத்தப்படும் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அரசு நடத்தும் விழாவை முதல்வரே புறக்கணித்துள்ளது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங் – மஜத கூட்டணி அரசு சார்பில் இன்று திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

ஆனால் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஸ்வரா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

திப்பு ஜெயந்திக்கு எதிராக மடிகேரியில் பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

பாஜக., கொடவா தேசிய கழகம் உள்ளிட்ட அமைப்புக்கள் முழு கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

திப்பு ஜெயந்திக்கு எதிரான போராட்ட அறிவிப்பு காரணமாக மடிகேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திப்பு ஜெயந்தி குறித்து பாஜ., மாவட்ட செயலாளர் சஜ்ஜல் கிருஷ்ணா கூறுகையில், திப்பு ஜெயந்தி என்ற பெயரில் மக்கள் பணத்தை அரசு வீணடிக்கிறது.

திப்பு ஒன்றும் போர் வீரர் அல்ல. அவர் ஏராளமான இந்துக்களை கொன்றதுடன், கோயில்களை சேதப்படுத்தி உள்ளார்.

இது போன்ற ஒருவரை எதற்காக புகழ வேண்டும்? இது ஓட்டுவங்கி அரசியல் மட்டுமே. குடகில் அனைவரும் இந்த கொண்டாட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றார்.

மடிகேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புக்களை சேர்ந்த ஏராளமானோரை போலீசார் கைது செய்துள்ளனர்.