டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம்

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது டிஎன்பிஎஸ்சி.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளில் அடங்கிய பணிகளுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.

இதற்கான தரவரிசை பட்டியல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

அதில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம்(1606), கீழக்கரை (1608) ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவா்களில் மாநில அளவில் 40 பேர் முதல் 100 இடங்களில் முன்னிலை பிடித்தனர்.

சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியுள்ளனர்.

ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தேர்வர்கள் குற்றம்சாட்டினர். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்,

வெளி மாவட்டங்களில் இருந்து வந்து தேர்வு எழுதியவர்களில் முதல் 100 இடங்களில் முன்னிலை பெற்றிருப்பதும்,

15 பேர் மாநிலங்கள் அளவில் முதல் 15 இடங்களில் தேர்ச்சி பெற்றிருப்பது பிற தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல் 40 பேரையும் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த தோ்வாணையம், சம்பந்தப்பட்ட தோ்ச்சி பெற்ற நபா்களுக்கு கடிதம் அனுப்பியது.

அதன்படி, தரவரிசையில் மாநில அளவில் முதல்  சுமாா் 40 பேரிடம், கடந்த கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு புகார் எதிரொலியாக சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள்,   ராமேசுவரம் பகுதியில் 5 தனியார் பள்ளிகள், ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்து நேற்று உத்தரவிட்டது.

மேலும் தேர்வாணையம் நடத்திய விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் குரூப் 4 முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.24) விசாரணையை தொடங்கியுள்ளனர்.

முதற்கட்டமாக ராமேசுவரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி, கீழக்கரை வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா ஆகிய இருவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் குரூப் 4 தேர்வெழுதியவர்கள் முதன்மை பெற்றது எப்படி என இருவரிடம் விசாரணை தொடங்கிய சிபிசிடி போலீஸார்,

அவர்கள் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராமேசுவரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் 99 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முதல் 100 இடங்களில், முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் வேறு 39 நபர்கள் புதிதாக தேர்வு செய்யப்படுள்ளதாகவும்,  இதுதொடர்பாக புதிய பட்டியல் வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.

மேலும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளது எனவும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் துணையுடன் விடைத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், முறைகேடு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.