திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதியை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்…


திருச்சி முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்த பகுதி மற்றும் சீரமைப்பு பணிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் கடந்த 22-ந்தேதி இரவு 9 மதகுகள் உடைந்தன. அதனை தற்காலிகமாக சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக அணையின் முதலாவது மதகு முதல் 17-வது மதகு வரை, 220 மீட்டர் தூரத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. அடுத்ததாக பாறாங்கற்கள் அடுக்கும் பணி நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் மதகுகள் உடைந்த பகுதியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

மேலும், உடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடைபெறும் பணியையும் அவர் பார்வையிட்டார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, திருச்சி சிவா எம்பி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதற்கிடையே, அணையில் இடிந்த 9 மதகுகள் மட்டுமின்றி மீதமுள்ள மதகுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, சில மதகுகளில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும், அணையின் அடித்தள பிளாட்பாரத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.