திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி நியமனம்: திமுக அறிவிப்பு

திருச்சியை மூன்று மாவட்டக் கழகங்களாகப் பிரித்து, அதற்கான பொறுப்பாளர்களை திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக க.அன்பழகன் இன்று (பிப்.1) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.

முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும்,

திருச்சி மேற்கு, திருவரங்கம், லால்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி மத்திய மாவட்டக் கழகச் செயலாளராக வைரமணியும்,

திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் நியமிக்கப்படுகிறார்கள்.

ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.