போயஸ் கார்டன் சோதனை பின்னணியில் அரசியல் சதி: டிடிவி தினகரன்..

போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் பின்னணியில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

 

இன்று (சனிக்கிழமை) காலை தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி வந்து சந்தித்துச் சென்றபோதுகூட அதில் அரசியல் இருப்பதாகக் கருதவில்லை. ஆனால், தற்போது போயஸ் கார்டனில் அம்மாவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் வருமான வரி சோதனைகள் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக உணர்கிறேன். வருமான வரித்துறையை யார் கையில் வைத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அதை ஏவிவிடுகிறார்கள்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் உள்ள எங்கள் அணிக்குதான் மக்கள் ஆதரவும் தொண்டர்கள் ஆதரவும் இருக்கிறது. இதன் காரணமாகவே இந்த சோதனைகள் எல்லாம் நடத்தப்படுகிறது.

அரசியலில் இருந்து எங்களை அழித்துவிட வேண்டும், ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கில்தான் இத்தகைய ரெய்டுகள் நடைபெறுகின்றன.

வணங்குகிறேன் என்றவர்கள் வரவில்லையே..

‘அம்மா வசிக்கும் போயஸ் தோட்டத்தை நோக்கி வணங்குகிறேன்’ என்று பேசியவர்கள் யாரும் நேற்று போயஸ் தோட்டத்தில் சோதனை நடந்தபோது வரவில்லையே. ஓ.பன்னீர்செல்வமோ, 32 அமைச்சர்களோ இல்லை அவர்களைச் சார்ந்தவர்களோ யாருமே எட்டிப்பார்க்கவில்லையே.
அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனப் பேசியவர்களைத்தான் இப்போது அம்மாவின் ஆன்மா நிச்சயம் மன்னிக்காது. அம்மாவின் ஆத்மா யாரை மன்னிக்காது என்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

சாதாரண மக்கள்கூட போயஸ் தோட்ட இல்ல சோதனை குறித்து கொந்தளித்துள்ளனர். ஆனால், பதவியை தக்கவைத்துக் கொள்ள குரல்கொடுக்காமல் அமைதி காத்தவர்களை மக்கள் கேள்வி கேட்பார்கள். மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுக்கு காலம் தகுந்த தண்டனை தரும்.

பயனற்ற 2 லேப்டாப்களே பறிமுதல்..

“சோதனை என்ற பெயரில் சில கடிதங்களையும் ஒரு பென் டிரைவ் மற்றும் பயனற்ற 2 லேப்டாப்களையுமே வருமானவரித்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர். அதனால், அவர்களுக்கு எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை.

சேகர் ரெட்டி வீட்டில் இருந்ததுபோல் நோட்டுகளும், வைரமும், தங்கமும் இங்கே இருக்கும் என எதிர்பார்த்து வந்தனர். ஆனால், சில மின்னணு சாதனங்களே அவர்களுக்கு கிடைத்தது”
நாங்கள் பயப்படவும் இல்லை பதறவும் இல்லை..

நான் அன்று சொன்னதைத்தான் இன்று மீண்டும் வலியுறுத்துகிறேன். இருப்பது ஒரு உயிர்; அது போவது ஒரு முறை. அதனால், நாங்கள் அஞ்சமாட்டோம். 1.5 கோடி தொண்டர்கள் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. அதனால், இந்த சோதனைகளால் நாங்கள் பயப்படவும் இல்லை; பதறவும் இல்லை. எதையும் சந்திக்கும் மன ஆற்றலை எங்களுக்கு ஜெயலலிதா கற்றுக்கொடுத்திருக்கிறார். இந்த இயக்கத்தைக் காக்க எந்தவித தியாகத்தை வேண்டுமானாலும் நாங்கள் செய்வோம்.
நரசிம்ம ராவ் நிலை என்னவானது?

1996-ல் நரசிம்ம ராவ் இதுபோன்ற ரெய்டுகளை ஏவிவிட்டார். ஆனால், அதன் பின்னர் அரசியலில் அவர் இருந்த இடமே தெரியவில்லை. யாராக இருந்தாலும் அதிகார துஷ்பிரயேகம் செய்தால் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் வீழ்ச்சி. கத்தி மட்டுமல்ல எந்தவித ஆயுதத்தை எடுத்தாலும் அவர்களுக்கு அதன் காரணமாகவே வீழ்ச்சி ஏற்படும். இப்போது வருமானவரி சோதனையை சிலர் ஆயுதமாக எடுத்துள்ளனர். இதன் பின்னால் இருக்கும் அரசியல் உள்நோக்கம் குறித்து நான் சொல்லத் தேவையில்லை.

TTV Dhinakaran Slams EPS, OPS And BJP