டி.டி.வி தினகரன் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு: இன்று விசாரணை..


ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்ககோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளது.

கடந்தாண்டு டிசம்பர் 21-ம் தேதி சென்னை ஆர்,கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இந்நிலையில், வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வெற்றி பெற்றதற்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றிருக்க முடியாது. அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கிய பிறகு ஆர்.கே.நகரில் அதிக அளவில் குக்கர்கள் கிடைத்துள்ளன. 30 லட்சம் ரூபாய் அந்த தொகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், தினகரன் சட்டபேரவைக்கு செல்ல தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இம்மனு இன்று முதல் வழக்காக விசாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.