18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பு முடிவு

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய டிடிவி தினகரன் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் டிடிவி தினகரன் மதுரையில் ஆலோசனை நடத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச்செல்வன், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதாக கூறினார்.

ஒருவேளை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதனைச் சந்திக்கவும் தங்கள் தரப்பில் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பில் கொறடா உத்தரவுக்கு முரணாக வாக்கை மாற்றிப் போட்ட ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலையில், எந்த விதிமீறலிலும் ஈடுபடாத தங்களைத் தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலின் நியாமற்ற நடவடிக்கையை மக்களுக்கு அம்பலப்படுத்தவே மேல்முறையீடு செய்ய முடிவெடுத்திருப்பதாகவும் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.