தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை 2-வது நாளாக தொடர்கிறது..

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று 2-வது நாளாக விசாரணையை தொடங்கினர்.

தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது வன்முறையை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில்243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவு பிறப்பித்தனர்.

அதைத் தொடர்ந்து, சிபிசிஐடி பிரிவு போலீஸார் தாங்கள் சேகரித்து வைத்திருந்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகள் மீது சிபிஐ அதிகாரிகள் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக சிபிஐ சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரி சரவணன் தலைமையிலான 4 குழுவினர் நேற்று தூத்துக்குடி வந்து தங்களது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர்.

முதல்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.

சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.

இந்தநிலையில்,துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக,சம்பவத்தின்போதுபணியில் இருந்தவட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடம் எல்லாம் அவர்கள் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர் என்ற விவரம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Tamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்

Latest-News News Samayam Tamil ஃபேஸ்புக் போல அனைத்து நடப்புகளையும்