விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடுகடத்த இங்கிலாந்து அனுமதி..

தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய 9000 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்திச் செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி விட்டார் என்பது மல்லையா மீதான குற்றச்சாட்டு.

இதையடுத்து அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி சிபிஐ சார்பில் இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி, விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிட்டது.

டிசம்பர் 10-ஆம் தேதி அன்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்த உத்தரவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்நிலையில் கெடு முடியும் கடைசி நாளில் மல்லையாவை நாடு கடத்தும் உத்தரவில் உள்துறை அமைச்சக செயலர் சஜித் ஜாவித் கையெழுத்திட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.