பகை மறந்து ஒன்று சேர்ந்த பழைய நண்பர்கள்: ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்த முலாயம் – மாயாவதி

உத்தரப்பிரதேசத்தில் இதுவரை எலியும், பூனையுமாக இருந்து வந்த முலாயம்சிங்கும், மாயாவதியும் ஓரே மேடையில் தோன்றி பிரச்சாரம் செய்தனர். அத்துடன் ஒருவரை ஒருவர் புகழ்ந்தும் பேசினர்.

1993ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கைகோர்த்து உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைத்தன. ஆனால் 2 ஆண்டுகள் கழித்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மாயாவதி வாபஸ் பெற்றதால் முலாயம் சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

1995ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி, லக்னோவில் விருந்தினர் இல்லத்தில் கட்சியினருடன் மாயாவதி ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தபோது, சமாஜ்வாதி தொண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு இரு கட்சிகளும் எலியும் பூனையும்போல பகைமை பாராட்டி வந்தன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கின்றன.

இருப்பினும் அகிலேஷ் யாதவ் மாயாவதியுடன் கைகோர்த்தது குறித்து, சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங் விமர்சித்து வந்தார். மேலும் 3 இடங்களில் நடைபெற்ற இரு கட்சிகளின் கூட்டுப் பேரணியில், உடல்நலத்தை காரணம் காட்டி முலாயம் சிங் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், முலாயம் சிங் போட்டியிடும் மெயின்புரி தொகுதியில் நடைபெற்ற பேரணியில், அவரும் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றினர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவும் உடனிருந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய மாயாவதி, பிற்பட்ட வகுப்பினருக்கான உண்மையான தலைவர் முலாயம் என்றும், மோடியைப் போல பிற்பட்ட வகுப்பினரை போலியாக ஏமாற்றுபவர் அல்ல என்றும் தெரிவித்தார்.