வேலூர் தொகுதி தேர்தல் ரத்து : திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை..

*“வேலூர் தொகுதி தேர்தல் ரத்து – தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது?”*

*“தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் காலில் பட்டு மிதிபட்டு கிடக்கிறது – ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகிற சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம்”*
– திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் “வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்து” என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடக்கத்திலிருந்தே தமிழகத்தில் தேர்தல் ஆணையம் என்ற ஒன்று செயல்படுகிறதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது. “அதிகாரிகள் மாற்றம்” குறித்து தி.மு.க. கொடுத்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தேர்தல் டி.ஜி.பி மாற்றச் சொன்ன அதிகாரிகளைக் கூட மாற்றவில்லை.

அ.தி.மு.க அமைச்சர் திரு வேலுமணியின் பினாமி சபேசனிடமிருந்து தேர்தல் பறக்கும் படையும், வருமான வரித்துறை அதிகாரிகளும் நடத்திய ரெய்டில் பல கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் கசிந்த நிலையில்,

சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்ற மேலிடத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் குறைவான பணம் கைப்பற்றப்பட்டதாக அப்பட்டமாக மக்களை ஏமாற்றும் விதத்தில் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், அந்தப் பக்கம் தேர்தல் ஆணையம் திரும்பிக்கூட பார்க்கவில்லை.
தி.மு.க.வை குறி வைத்தே “செலவினப் பார்வையாளர்கள்” மற்றும் “சிறப்பு செலவினப் பார்வையாளர்கள்” சுற்றிச் சுற்றி வந்தனர்.

அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களின் முறைகேடுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் இரவு பகலாக தலா 1000 ரூபாய் விநியோகிக்கப்பட்டு –

அதுகுறித்த வீடியோக்கள் வெளிவந்தும் தேர்தல் ஆணையம் ஓடி ஓளிந்து கொண்டது.
அ.தி.மு.க அமைச்சர்கள் பொறுப்பில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு பணம் தண்ணீராக கொடுக்கப்படுகிறது.

ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வெளிப்படையாகவே வழங்கப்படுகிறது. இதே வேலூர் தொகுதியில் திரு ஏ.சி சண்முகம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததைப் பார்க்காமல் – கண் மூடி வித்தை காட்டியது தேர்தல் ஆணையம்.

ஆனால், திட்டமிட்டு தி.மு.க. வேட்பாளர் வீட்டில் ஒரு ரெய்டை நடத்தி, வேட்பாளருக்கு சம்பந்தமே இல்லாத இடத்தில் பணத்தை பறிமுதல் செய்தேன் என்று கூறி – அதை தி.மு.க.வுடன் முடிச்சுப் போட்டு இப்படியொரு தேர்தல் ரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து அறிவிப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணி செயலாளரும்,

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளருமான திருமதி கனிமொழி அவர்கள் தூத்துக்குடியில் தங்கியிருக்கும் இல்லத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

பா.ஜ.க போட்டியிடும் தூத்துக்குடி தொகுதியில் பா.ஜ.க படுதோல்வி அடைந்துவிடும் என்கிற பயத்தால் தி.மு.கவை குறிவைத்து இதுபோன்ற ரெய்டுகள் நடத்தி சீண்டிப் பார்க்க நினைப்பது,

“நாங்கள் அ.தி.மு.க – பா.ஜ.க.வில்” இன்னொரு கூட்டணி கட்சி என்ற தோற்றத்தை காட்ட இந்திய தேர்தல் ஆணையம் முன்வந்திருப்பதாகவே கருதுகிறேன். இது ஒரு ஜனநாயகப் படுகொலை.

திரு டி.என். சேசன் போன்ற நேர்மையாளர்கள் தலைமை தேர்தல் ஆணையராக இருந்த புகழ்மிக்க இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் வரலாறு காணாத அளவிற்கு சந்தேகத்திற்குள்ளாகியிருப்பது

இந்த 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்துள்ள மிகக்கேவலமான சாபக்கேடு. ஐந்தாண்டுகள் தன்னாட்சி அமைப்புகளை சீரழித்த பிரதமர் – வீட்டுக்குச் செல்லும் நேரத்தில் கூட இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை படு கொச்சைப்படுத்தி – அதன் தன்னாட்சியை படுகுழியில் தள்ளி புதைத்துள்ளார்.

தமிழகத்தில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தேர்தல் முறைகேடுகளையும், பண விநியோகத்தையும் தாராளமாக செய்ய அனுமதித்து

– திராவிட முன்னேற்றக் கழகத்திடமும் – அதன் கூட்டணிக் கட்சிகளிடமும் பாரபட்சமாகச் செயல்படும் ஒரு இவ்வளவு மோசமான தலைமைத் தேர்தல் அதிகாரியை இதுவரை தமிழகம் கண்டதில்லை.

அதை தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்த்து – அத்தனை முறைகேடுகளுக்கும் கைகட்டி நின்று துணைபோகும் தேர்தல் ஆணையத்தையும் தமிழக மக்கள் இதுவரை பார்த்ததில்லை.

தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோடியின் காலில் பட்டு மிதிபட்டு கிடக்கிறது. இந்த அராஜகங்களின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தை அசைத்துப் பார்க்கலாம்,

அதன்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உரசிப் பார்க்கலாம் என நினைத்தீர்கள் என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அதேபோல், ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடுகிற சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம் என பகிரங்கமாக எச்சரிக்க விரும்புகிறேன்.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் எப்போது நடத்தப்பட்டாலும் வெற்றி பெறப்போவது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

ஆனால், தேர்தலில் அனைத்துக் கட்சிகளுக்கும் “சம களம்” ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்புள்ள இந்திய தேர்தல் ஆணையம்

இப்படி மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிக்கு “கூட்டாளியாகச் செயல்படுவதை இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சுதந்திரமான, நேர்மையான தேர்தல் சவக்குழிக்கு அனுப்பும் சதித்திட்டத்தை முறியடித்தே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாத்திட இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர், ஆணையர்கள் ஆகியோர் நியமனங்களிலும்,

மாநில தலைமை தேர்தல் அதிகாரி நியமனத்திலும் மிகக்கடுமையான சீர்திருத்தங்களை கொண்டுவர திராவிட முன்னேற்றக் கழகம் தீவிரமாக பணிகளைத் துவங்கும் –

தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை நாடவும் தயங்காது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்