வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பதற்காக கடந்த 25 -ம் தேதி தூத்துக்குடிக்கு சென்ற வேல்முருகனை தூத்துக்குடிக்குள் நுழைய விடாமல் தடுத்த போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். காவல்துறையினரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தண்ணீர் கூட அருந்தாமல் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வேல்முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது டோல்கேட் அடித்து நொறுக்கப்பட்டதற்காக தூத்துக்குடியில் சிறை வைக்கப்பட்டிருந்த வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வேல்முருகனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட வேல்முருகன் தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ வேல்முருகனின் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இதையடுத்து சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேல்முருகன் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு காவிரி மேலாண்மை வாரியத்திற்காக வேல்முருகன் நடத்திய போராட்டத்தின் போது சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதற்காக பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது