வெனிசுலா காவல் நிலையத்தில் கலவரம்: 68 பேர் உயிரிழப்பு..


தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் 68 பேர் பலியாகினர்.

இதுகுறித்து வெனிசுலா அரசு தரப்பில், “வெனிசுலாவில் உள்ள மத்திய நகரமான வெலன்சியாவில் உள்ள காவல் நிலையத்தில் கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட இதில் 68 பேர் பலியாகினர்” என்று கூறப்பட்டுள்ளது.

காவல் நிலையத்துக்கு வெளியே குற்றவாளிகளின் உறவினர்கள் நீணட நேரமாக காத்திருந்தும் இந்த கலவரத்தில் பலியானவர்கள் குறித்த தகவல் ஏதும் அவர்களிடம் அளிக்கப்படவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயிரிழப்புக்கான காரணம் குறித்து உரிய விசாரணை அமைக்கப்படும் என்று வெனிசுலா அரசு தெரிவித்துள்ளது.

வெனிசுலாவை பொறுத்தவரை அங்குள்ள சிறைச் சாலைகளில் கூட்டமிகுதி காரணமாக அவ்வப்போது இது போன்ற கலவரங்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது வாடிக்கையான நிகழ்வாக பாரக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமாசோனாஸ் மாகாணத்திலுள்ள பியூர்டோ அயாகுச்சோ சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 37 கைதிகள்உயிரிழந்தனர்.

கடந்த 2013-ம் ஆண்டு லாரா மாகாணம் யுரிபனா நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 60 கைதிகள் பலியாயினர். 150 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் கலவரத்தில் 68 பேர் உயிரிழந்தனர்.