வெற்றிவேல் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல்: இன்று பிற்பகல் விசாரணை..

ஜெயலலிதா சிகிச்சை பெறும்போது எடுத்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, அவர் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெற்றிவேல் வெளியிட்டார்.

 

வெற்றிவேல் வெளியிட்ட சில மணி நேரத்துக்குள் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பர பரப்பாக பரவின. இது தேர்தல் நடத்தை விதி மீறல் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் அந்த வீடியோ காட்சிகள் ஒளிபரப்பானது நிறுத்தப்பட்டது.

 

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார்களை ஒருங்கிணைத்து வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் முடிந்ததும் வெற்றிவேல் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது.

 

இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வெற்றிவேல் இன்று மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவை அவசர மனுவாக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதையடுத்து, அவரது மனு இன்று பிற்பகல் 1 மணிக்கு அவசர மனுவாக விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.