விநாயகர் சதுர்த்தி : தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..

ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தியாக இந்துகள் தமிழகம் முழுவதும் கொண்டாடுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் புகழ் பெற்ற பிள்ளையார்பட்டியில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிகாலை முதல் தரிசனம் செய்து வருகின்றனர்.

அதுபோல் திருச்சி மலைக் கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலில் அதிகாலை முதல் மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்

முழு முதற் கடவுள், வினை தீர்ப்பவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த திருநாளாக ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

அதிகாலையில் நீராடி, வீடுகள்தோறும் மாவிலைத் தோரணம் கட்டி, இலையில் புத்தரிசியைப் பரப்பி களிமண்ணால் ஆன விநாயகரை வைத்து, அருகம்புல், மல்லிகைப்பூ, எருக்கம்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கின்றனர்.

 

முக்கனிகளுடன், அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, கொய்யாப்பழம் போன்றவற்றைப் படையலிட்டு விநாயகரை வழிபடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி நாளில், உணவு எதுவும் எடுக்காமல் விரதம் இருந்து வழிபடுவோரும் உண்டு. விநாயகர் கோவில்கள் அலங்கரிக்கப்பட்டு இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

பலதரப்பட்ட மக்களும், கலாச்சாரமும் கொண்ட இந்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும், அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படுவது என்பதுதான் விநாயகர் சதுர்த்தியின் தனிச்சிறப்பு