‘மீ டூ’ கிடுகிடு: நடிகர் சங்கத்தில் விசாகா கமிட்டி

உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள மீடு இயக்கத்தின் எதிரொலியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பாலியல் புகார்களை விசாகா கமிட்டி அமைக்க அந்த அமைப்பின் நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் திங்களன்று நடந்த சிறப்பு செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1.அங்கத்தினர்களுடைய உரிமைகளையும் சுயமரியாதையையும் காப்பாற்றும் வகையில் ஏற்கனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தில் சட்டங்கள் இருந்தாலும், நீதிமன்றத்தால் பரிந்துரை செய்யப்பட்ட ‘விசாகா குழு’ செயல்படும் சட்டங்களின் அடிப்படையில் குழு ஒன்று உருவாக்கப்படும்.

இதில் தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளோடு பெரும்பான்மை மகளிரும் உட்பட்ட குழுவாக அமையும். பிரச்சனைகளை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மனநல மருத்துவர் ஒருவரும் அதில் இடம் பெறுவார். அதற்க்கு ஆண்பால், பெண்பால் பாகுபாடின்றி பிரச்சினைகளை நடு நிலையோடு அணுகி தீர்வுகளை எடுக்கும்.

2. படப்பிடிப்பு தளங்களில் ஏற்படும் சகல பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், இயக்குனர்கள் சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு ஒன்றை அமைக்கவும் பரிந்துரை செய்கிறது.

இவ்வாறு அதன் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.