தயாரிப்பாளர் சங்க நிதியை விஷால் மோசடி செய்து விட்டதாக புகார்: அலுவலகத்திற்கு பூட்டுப் போட்ட தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் 7 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி, தியாகராய நகரில் உள்ள சங்க அலுவலகத்திற்கு உறுப்பினர்கள் சிலர் பூட்டுப் போட்டுள்ளனர்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிரந்தர வைப்புத் தொகையான 7 கோடி ரூபாயை விஷால் முறைகேடு செய்து விட்டதாக தயாரிப்பாளர்கள் சிலர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். தியாகராய நகரில் உள்ள அச்சங்கத்தின் வாடகை கட்டிட அலுவலகத்திற்கு சென்ற தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர், நிரந்த வைப்புத் தொகைக்கு கணக்கு கொடுக்குமாறு செயலாளர் கதிரேசனிடம் கேட்டனர். அப்போது காரசார வாதம் ஏற்பட்டது. 

கதிரேசனின் பதிலை ஏற்றுக் கொள்ளாத அவர்கள், அலுவலகத்திற்குள் சென்று ஊழியர்களை வெளியேற்றினர். 

இதை அடுத்து இரும்புச் சங்கிலி மற்றும் பூட்டைக் கொண்டு அலுவலக நுழைவு வாயிலை இழுத்துப் பூட்டினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏ.எல்.அழகப்பன் உள்ளிட்டோர், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியைப் பயன்படுத்தி விஷால் பல்வேறு முறைகேடுகளைப் புரிந்து வருவதாக குற்றம்சாட்டினர். தயாரிப்பாளர்கள் நலனில் சிறிதும் அக்கறையின்றி விஷால் பேசி வருவதாகவும் அவர்கள் விமர்சித்தனர். மேலும், சங்கத்தின் பணம் 7 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினர். இதனையடுத்து, அண்ணாசாலையிலும் தயாரிப்பாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.