மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் கடும் வன்முறை …


மேற்கு வங்க மாநிலத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வேட்பாளர் உள்பட பலர் காயம் அடைந்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடும் வன்முறை, பல மாதங்களாக நடந்த சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது. ஆளுங்கட்சியினர் மற்ற கட்சி வேட்பாளர்களை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், தேர்தலின்போது வன்முறை வெடிக்கும் சூழ்நிலை இருந்தது. எனவே, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 46 ஆயிரம் மாநில போலீசார், 12 ஆயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தனை பாதுகாப்பையும் மீறி வடக்கு 24 பர்கானாஸ், பர்த்வான், கூக் பெஹர், தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவின்போது வன்முறை ஏற்பட்டுள்ளது. பாங்கர் பகுதியில் தொலைக்காட்சி நிறுவன வாகனம் ஒன்றை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். கேமராவும் உடைக்கப்பட்டது. அப்பகுதிக்குள் பத்திரிகையாளர்களை செல்ல அனுமதிக்கவில்லை.

பிர்பராவில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்குள் வாக்களிக்க செல்பவர்களை ஒரு கும்பல் ஆயுதங்களுடன் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கும்பல் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என குற்றம்சாட்டப்படுகிறது. கூச் பெஹரில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது குண்டு வெடித்தது. இந்த மோதல் மற்றும் குண்டு வெடிப்பில் வேட்பாளர் உள்பட 20 பேர் காயமடைந்தனர். ஓட்டு போட சென்றபோது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

வாக்குப்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்திற்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 34.2 சதவீத இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிடாததால் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் 17-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.