மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி அபார வெற்றி..

மேற்கு இந்தியதீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சுமார் 150 ஓவர்கள் பேட் செய்து 649/9 டிக்ளேர், மே.இ.தீவுகள் 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 98.5 ஓவர்கள் ஆடி 272 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி.

இந்திய அணியின் ஆதிக்கத்தைப் பற்றி விதந்தோத எதுவும் இல்லை. இது வழக்கம்தான், ஆனால் மே.இ.தீவுகள் அணியில் இன்று ஆக்ரோஷம் காட்டிய கீமோ பால் 49 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 47 எடுத்தது, முதல் இன்னிங்சில் ராஸ்டன் சேஸ் 79 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் சேர்த்தது,

இரண்டாவது இன்னிங்சில் இடது கை தொடக்க வீரர் போவெல் 93 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்து 6வது விக்கெட்டாக ஆட்டமிழந்தது என்று ஆறுதலான விஷயங்கள் அந்த அணிக்கு உள்ளன.

குல்தீப் யாதவ் 3 வடிவங்களிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 7வது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

94/6 என்று தொடங்கிய மே.இ.தீவுகள் அணி கீமோ பால், ராஸ்டன் சேஸ் அதிரடிக் கூட்டணி மூலம் 73 ரன்களை 7வது விக்கெட்டுக்காகச் சேர்த்தது. 13.2 ஓவர்களில் இந்த 73 ரன்கள் வந்ததையும் கவனிக்க வேண்டும். அடித்து ஆடினால் இந்தியப் பந்து வீச்சும், கேப்டன் கோலியும் திணறுவதை இது எடுத்துரைக்கிறது.

இவர்கள் இருவரும் அடித்தாலும் கீமோ பால் விக்கெட்டை உமேஷ் யாதவ் எகிறு பந்து மூலம் வீழ்த்த, ராஸ்டன் சேஸ் ஆஃப் ஸ்பின்னர்களின் கனவுபந்தில் அஸ்வினிடம் மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே வண்டி இடைவெளி விழ பவுல்டு ஆனார்.

பிஷூ 3 பவுண்டரிகளுடன் 17 ரன்கள் எடுக்க லீவிஸ், கேப்ரியலை அஸ்வின் வீழ்த்த 48 ஓவர்களில் 181 ரன்களுக்கு மே.இ.தீவுகள் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ரிஷப் பந்த் 16 பை ரன்களை விட்டதோடு 2 கேட்ச்களையும் விட்டார்.

விக்கெட்டுகள் விழும் வேகம் காரணமாக விராட் கோலி பாலோ ஆன் கொடுத்தார். பிராத்வெய்ட், போவெல் முதல் விக்கெட்டுக்காக 32 ரன்களைச் சேர்த்தனர். 10 ரன்களில் அப்போது பிராத்வெய்ட் அஸ்வின் பந்தில் ஷாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இப்போதிலிருந்து போவெல் கொஞ்சம் அதிர்ஷ்டம் கலந்த ஆக்ரோஷ இன்னிங்சை ஆடினார். ஃபுல் லெந்த்தில் வீசிய பந்தை அவர் வெளுத்து வாங்கினார், 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் அவர் 83 ரன்களை அதிகபட்சமாக எடுத்ததால் மே.இ.தீவுகள் 2வது பெரிய தோல்வியத் தழுவியது.

2007 தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 283 ரன்களில் தோல்வியடைந்ததுதான் மே.இ.தீவுகளின் மிகப்பெரிய தோல்வியாகும்.

குல்தீப் யாதவ் வீசுவதை கண்டுபிடிக்க மே.இ.தீவுகள் தொடர்ச்சியாக அவரை ஆடினால்தான் முடியும், ஷேய் ஹோப், ஹெட்மையர், அம்பிரிஸ், போவெல், ராஸ்டன் சேஸ் ஆகியோரை இலகுவாக வீழ்த்த 151/6 என்று ஆன மே.இ.தீவுகள் பிறகு 196 ரன்களுக்குச் சுருண்டது,

குல்தீப் யாதவ், 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் அஸ்வின் 71 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஆட்ட நாயகனாக பிரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது மே.இ.தீவுகள், 2 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்று முன்னிலை.