உலகக்கோப்பை கால்பந்து – கொரியாவின் அதிரடியால் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை வெளியேற்றியது …


ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் கொரியா குடியரசிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது..

உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெருகிறது. ஒரு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி அணி, கொரியா குடியரசை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் ஜெர்மனி அணி களமிறங்கியது.

போட்டி தொடங்கியதில் இருந்தே ஜெர்மனி அணி கோல் போட தொடர்ந்து முயற்சித்தது. ஆனால் அனைத்து முயற்சிகளையும் கொரியா அணி எளிதாக முறியடித்தது. கொரியா அணியின் கோல்கீப்பர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியும் கோல் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டமும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதிலும் இரு அணியும் கோல் அடிக்க முடியாமல் இருந்தனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்தில் கொரியா அணியின் கிம் யங்வான் கோல் அடித்து அணிக்கு முன்னிலை கொடுத்தார்.

அதன்பின் ஜெர்மனி அணி கோல்கீப்பரை உள்ளே இறக்கி விளையாடியது. இதை பயன்படுத்தி கொண்ட கொரியா அணி மீண்டும் ஒரு கோல் அடித்தது. இதனால் கொரியா அணி 2-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் ஜெர்மனி அணி மேற்கொண்டு கோல் அடிக்காததால் கொரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனால் ‘எஃப்’ பிரிவு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட ஜெர்மனி அணி தொடரைவிட்டு வெளியேறியது.