எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சாயாவனம் என்ற நாவல் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானர். அவருக்கு வயது 80.

அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் சா.கந்தசாமியின் மறைவுச் செய்தியறிந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “ ‘சாயாவனம்’ என்ற புதினத்தின் வாயிலாகத் தமிழ் இலக்கிய உலகில் சாகாவரம் பெற்ற படைப்பாளி – சாகித்ய அகாடமி விருது பெற்ற சா.கந்தசாமி உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து வேதனையடைகிறேன்.
எழுத்து என்பது வெற்று அலங்காரத்திற்கானதல்ல என்பதையும், அது காலம், கலாச்சாரம், அரசியல் ஆகியவற்றில் ஏற்படுத்தப்படும் தடைகளை உடைத்தெறியும் படைப்பாயுதமாக இருக்க வேண்டும் என்பதையும் வெளிப்படையாக அறிவித்து, அதன்படியே படைப்புகளை வழங்கியவர் சா.கந்தசாமி.

இன்றைய நிலையில் அவருடைய கருத்தும் படைப்பும் மிகவும் தேவைப்படும் சூழலில் அவர் நம்மைவிட்டு மறைந்துவிட்டார். நாட்டுப்புறவியலையும், நவீன இலக்கியக் கூறுகளையும் சமமான அளவில் தன் படைப்புகளில் வெளிப்படுத்திய சா.கந்தசாமி அவர்கள், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பேரன்புக்குரியவர்.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இலக்கிய அன்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.