வரலாற்றில் இல்லாத துன்பத்தை அனுபவிக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

அமெரிக்காவை மிரட்டினால் வரலாற்றில் இதுவரை அனுபவிக்காத துன்பத்தை ஈரான் அனுபவிக்க நேரிடும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மீண்டும் அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டாம். இல்லையேல் வரலாற்றில் இதற்கு முன் ஈரான் அனுபவிக்காத துன்பத்தை அனுபவிக்க நேரிடும். பாதுகாப்பாக இருங்கள்”என்று பதிவிட்டுள்ளார். இதற்கு  முன்னர் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, ‘ஈரானுடனான சமாதானம் என்பது சமாதானங்களுக்கெல்லாம் தாய்.  ஈரானுடனான போர் என்பது அனைத்து போர்களுக்கெல்லாம் தாய் என்பதை அமெரிக்கா அறிந்திருக்க வேண்டும்”என்று  குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானுக்கு இத்தகைய மிரட்டலை டிரம்ப் விடுத்துள்ளார்.

டிரம்ப் –  ஹசன் ரவ்ஹானி ஆகியோருக்கு இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும்  இடையே மோதல் முற்றி வருவது சர்வதேச நாடுகளுக்கிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தை பைத்தியக்காரத்தனமானது என்று டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதர தடைகளை அமெரிக்கா விதித்தது. தற்போது ஈரானின் முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய்யை பிற நாடுகள் வாங்கக் கூடாது என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.