இளைய நீதிபதியாகும் 21 வயது ராஜஸ்தான் மாநில இளைஞர்..

ராஜஸ்தான் மாநில நீதித்துறை பணியில் இந்தியாவின் மிக குறைந்த வயதான 21 வயதில் நீதிபதி பொறுப்பை ஏற்பவர் எனும் பெருமையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மயங்க் பிரதாப் சிங் என்ற இளைஞர் பெறவுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரின் மானசரோவர் பகுதியைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங்(21). இவர், ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் தனது ஐந்தாண்டு சட்டப்படிப்பான எல்.எல்.பி படிப்பை கடந்த ஏப்ரல் மாதம் பூர்த்தி செய்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் நீதித்துறை சேவைகள் தேர்வில் கலந்துகொள்வதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 23- இல் இருந்து 21-ஆக குறைத்தது.

இதையடுத்து 2018 ஆம் ஆண்டுக்கான ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் தேர்வின் நீதிபதிகளுக்கான தகுதி தேர்வில் கலந்துகொண்ட மயங்க் பிரதாப், தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றார்.

இதையடுத்து விரைவில் பதவியேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிக இள வயதில் நீதிபதியான இளைஞர் என்ற சிறப்பை மயங்க் பிரதாப் சிங் பெறவுள்ளார்.

இது குறித்து, மயங்க் பிரதாப் சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஒரு நல்ல நீதிபதியாக செயல்படுவதற்காக, ராஜஸ்தான் நீதித்துறை சேவைகள் 2018 தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக ஒவ்வொரு நாளும் 12 முதல் 13 மணி நேரம் தொடர்ந்து படித்து வந்ததாகவும், என் பெற்றோரும் எனக்கு உதவியாக இருந்தனர்.

ஒரு நல்ல நீதிபதியாக பணியாற்றுவோருக்கு நேர்மை தான் மிகவும் முக்கியம். வெளியில் இருந்து வரும் எந்த சக்திகளுக்கு எளிதில் ஆளாகாமல், ஆள் பலம், பண பலத்துக்கு ஆசைப்படாமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என கூறினார்.

இடமிருந்து வலமாக: மாயங்கின் தந்தை ராஜ்குமார் சிங், மாயங்க் சிங், அவரது தாயார் மஞ்சு சிங், மற்றும் அவரது சகோதரி ரிது சிங்