“அர்னாபின் ‘ரிபப்ளிக்’ சேனலுக்கு தடை விதிக்க வேண்டும்” : இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு…

ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி மீது புகார் எழுந்துள்ள நிலையில், ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அர்னாப் கோஸ்வாமிக்கும், தொலைக்காட்சி வாடிக்கையாளர் கணக்கீட்டு நிறுவனமான பார்க்-ன் முன்னாள் முதன்மை செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்கள் அதிர்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் ரிபப்ளிக் டிவிக்காக, பிற தொலைக்காட்சிகளின் பார்வையாளர்கள் தரவுகள் மாதந்தோறும் முறைகேடாக மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பார்க் தரவுகள் தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு தெரிவித்த புகார்கள் உண்மையாகியுள்ளது.

தொலைக்காட்சி தரவுகள் தொடர்பான முறைகேடுகள் குறித்த விசாரணை முடிவு பெறும் வரை ரிபப்ளிக் தொலைக்காட்சியை இந்திய ஒளிபரப்பு அமைப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.