தமிழ்நாடு காங்., கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் கே எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த திருநாவுக்கரசர் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்படலாம் என்று கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை (02.02.2019) அறிவித்துள்ளது.

மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன்.

கட்சியில் இளைஞர்களைச் சேர்க்க செயல்தலைவர்களுடன் சேர்ந்து பாடுபடுவேன். திருநாவுக்கரசுக்கான இடம் எப்போதும் காங்கிரஸ் கட்சியில் இருக்கும், என்று தெரிவித்தார் கே.எஸ்.அழகிரி.

2003 ஆம் ஆண்டுக்குப் பின்னர், மண்டல வாரியாக தமிழக காங்கிரசில் செயல்தலைவர்கள் தற்போதுதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.