தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியம்… ஓவியருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழ் எழுத்துகளால் வள்ளுவர் ஓவியத்தை வரைந்த கலைஞருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து என கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து இன்றைய தமிழ் எழுத்துகள்வரை உள்ள 741 தமிழ் எழுத்துகளைக் கொண்டு, திருவள்ளுவர் ஓவியத்தை வடித்துள்ள ஓவியக் கலைஞர் கணேஷ் அதனை ட்விட்டரில் பதிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டேக் செய்திருந்தார். இதனைப் பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின், அந்த ஓவியருக்கு வாழ்த்துத் தெரிவித்து தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் “ ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!” என்று தெரிவித்துள்ளார்.