பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் : பிரதமர் மோடி அறிவுரை..

நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

இந்தியா டுடே நடத்திய கருத்தரங்கில் பேசிய மோடி, பிரதமராகப் பொறுப்பேற்ற போது

மத்தியில் அரசை எப்படி நடத்துவது என்று தமக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

அதுவரை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்தான் மத்திய அரசை நடத்தி வந்ததாகவும், அத்தகைய குடும்ப பின்புலம் தமக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், 55 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நிகழாத முக்கியமான மாற்றங்கள் கடந்த 55 மாதங்களில் நிகழ்ந்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நாடும் சாதாரணமாக கருத முடியாத அளவுக்கு இந்தியா வியூகங்களை மாற்றியுள்ளதாகவும், உலக நாடுகள் தற்போது இந்தியாவை நன்கு புரிந்திருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் பலத்தை சிலர் சந்தேகிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் யுத்தத்திற்கு உலகமே ஒருபுறம் ஆதரவு அளித்து வரும் நிலையில்,

மறுபுறம் உள்நாட்டில் சில கட்சிகள் சந்தேகங்களை எழுப்புவதாக குறிப்பிட்ட மோடி, இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்துவதாக சாடினார்.

மோடிக்கள் வரலாம் போகலாம், இந்தியா எப்போதும் இருக்கும் என்று குறிப்பிட்ட மோடி, இதனால்தான் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் அரசியல் வேண்டாம் என வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்,